பனிக்கால நினைவுகள் [ மலைராணியின் மடியில் 12 ]


             

                            பனியும், பனியின் நிமித்தமும்.  

           தமிழில் ஐந்து திணைகள் உள்ளன.  குறிஞ்சி என்பது  மலையும், மலை சார்ந்த இடத்தையும் குறிப்பிடுவது.  குறிஞ்சித்திணையின் ஒழுக்கம்  கூடலும், கூடல் நிமித்தமும் ஆகும்.  இதைக் கொஞ்சம் மாற்றி, பனியும் பனியின் நிமித்தமும் என்று இதை வரைகிறேன். 

           மூன்றாம் பிறை , பன்னீர் புஷ்பங்கள்  போன்ற நிறைய திரைப்படங்கள் நீலகிரியின் பனி படர்ந்த இடங்களை, குளிர் நிறைந்த ஞாபகங்களை மனக்கண் முன்பு கொண்டுவந்து நிறுத்தவல்லவை.  நிறைய இயற்கைக்  காட்சிகளை  ஆரம்பத்திலிருந்து திரைப்படங்கள் மூலமாகவும், அதன் பின்னர் தொலைக்காட்சிப் பெட்டியின் மூலமாகவும், தற்போது  mobile மூலமாகவும்தானே பார்க்கிறோம்.  பனியையும்,   mist -ஐயும் காட்சிப் படுத்தும் , குளிரை உணர வைக்கும் திரைப் படங்களை குளிர்ப் பிரதேத்தில் இருந்தவாறு பார்ப்பது, மழையில் நனைந்து கொண்டே குச்சி ஐஸ் சாப்பிடுவதற்கு ஒப்பானது.

         எங்களின் இளம் பிராயத்தில்  ஐந்து மாதங்களுக்குப் பனி உணரப்படும். அப்போதெல்லாம் இவ்வளவு மக்களும், கட்டிடங்களும் இல்லை. நிறைய மரங்கள் இருந்தன. புல்வெளிகள் அதிகம் இருந்தன.  October  இலேயே  குளிர் ஆரம்பித்து விடும்.  நவம்பரில்  monsoon மழையும்  சேர்ந்து கொள்ள குளிர் பின்னி எடுத்து விடும். 1978 - இல் இப்பேர்ப்பட்ட ஒரு நவம்பர் குளிர் கால  monsoon  - ல் தான்  flood வந்தது. குன்னூர் மார்க்கெட் தண்ணீரில் மூழ்கியது.எங்கள் area மேட்டுப் பாங்கான இடமாதலால் நாங்கள் மேலே நின்று பார்த்தோம். அப்போது  மார்க்கெட் மூழ்கியது மட்டுமல்லாமல், மேட்டுப் பாளையம் நோக்கிப் பெருக்கெடுத்த குன்னூர் ஆறு drums எருமை ஆகியவற்றை அடித்துக் கொண்டு போனது.  அச்சமயம் முதலமைச்சராக இருந்த  MGR, வெள்ளை வேட்டியை சற்றே உயர்த்தியவாறு  சேற்றில் நடந்து வெள்ள சேதத்தைப் பார்வையிட்டார். ( நான்  ADMK அல்ல.  In fact ஒருதரம் கூட ADMK  விற்கு ஓட்டுப் போட்டதில்லை ). உடனடியாக இரண்டாவது பாலம் கட்டப்பட்டு நீர் வரத்து சீர் படுத்தப் பட்டது.  

        அதே சமயம் அப்பாவின் நண்பரான போனிஃபேஸ் என்பவரின் மகள் ஊட்டி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தாள். அது எவ்வாறெனில் ,அவர்களின் வீட்டருகில்   plains - ஐச் சேர்ந்த   ஒரு லேடி டாக்டர்  வேலை நிமித்தமாகக் குடியிருந்தார். அந்த டாக்டருக்கு  திருமணம்  நிச்சயம் ஆகியிருந்தது. அப்போது துணைக்காக நண்பரின் மகள் இரவில் தங்கி இருந்தார். உடன் ஒரு வேலைக்கிருந்த சிறுமி.  இரவு நேரத்தில்  area வில் வெள்ளம் வந்து விடவே,  இவர்களும் சுற்றுப் புற வீடுகளில் இருந்தவர்களும் மாடி ஏறி தற்காத்துக் கொண்டுள்ளனர்.  Ground floor சற்றே மூழ்கும் அளவுதான் வெள்ளம்.  இப்போது இங்கு என்ன ஆனதென்றால், நகைகள்  ground floor - ல் உள்ளன என்று கூறி  அவற்றை எடுப்பதற்காக லேடி டாக்டர் கீழே சென்றுள்ளார் .  நேரமாகியும் வராததால் நண்பரின் மகளும் steps  இறங்கிக்  கீழே சென்றுள்ளாள்.  இரண்டு பேருமே மேலே வரவில்லை. வேலைக்கிருந்த சிறுமி மட்டும் நடுங்கியவாறு மேலே அமர்ந்திருக்க, காலை வெள்ளம் வடிந்த பின்னர் அக்கம் பக்கத்தினரால் இருவரின் உடல்கள் காணப் பட்டிருக்கின்றன.  இதை அறிந்த நிச்சயிக்கப் பட்டிருந்த மணமகன் , மேட்டுப் பாளையத்திலிருந்து வரும் மலை ரோடு மூடப் பட்டதால் வெகு தூரம் நடந்தே வந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். 

             December , January ஆகிய மாதங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  December - ஐ நினைக்கும் போது டிசம்பர் பூக்கள், Christmas ஞாபகத்திற்கு வருகின்றன.  என் தங்கை  பாடிய   school பாட்டான  ' பெத்தலையில் பிறந்தவரை போற்றித் துதி மனமே . கோமகனும் தொட்டிலிலே ;  குளிர் பனி கொட்டிலிலே '   என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பனி, பனி, பனிதான்.  January ல் புது வருட காலைப் பொழுது பனி கலந்த வெயிலுடன்  fresh and energetic ஆக மனதில் ஓடுகிறது.  February  கடைசியில்தான் பனி நிறைவுக்கு வரும்.

       Estate  - ல் இருந்து  வரும் வழியில் சிறுத்தை வரும் என்று வகுப்புத் தோழி கூறியபோது  ( புலி என்று சொன்னாள்  ) நம்ப மறுத்தது மனது. ஆனால், அவள் உண்மையைத்தான் கூறி இருக்கிறாள். மனம் நம்ப மறுத்தாலும் பயம் கொண்டது. இரவு சமையலறையில் அம்மாவும், அப்பாவும் வேலை செய்தவாறே பேசிக் கொண்டிருக்கையில்,   bed room -  ல் கட்டிலில் சுவரோரமாகப் படுத்திருந்த போது,  கட்டிலுக்கடியில் இருந்து சிங்கம் வரும் என்று நினைத்து , கட்டிலின்  மேல் ஓடி வந்து  ( இரண்டு கட்டில்களை சேர்த்துப் போட்டதால் தூரமாகத் தோன்றும் ) -   தாண்டிக்  குதித்து சமையலறைக்கு ஓடுவது .




             அதேபோல் இரவு  கதவைத் திறந்தால், எட்டிப் பார்த்தால் எட்டு வீடுகள் முடிந்த பின் இருக்கும்    edge - இலிருந்து சிங்கம் அல்லது சிறுத்தை ஓடி வருவதுபோல் பயந்து,  சட்டென உடலைப் பின்னிழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்து கதவை மூடித் தாள் போடுவது. உண்மையில் மலைப் பகுதிதானே தவிர , சிறுத்தைகள் போன்ற மிருகங்கள் இருக்கிற அடர்ந்த காட்டுப் பகுதி அல்ல.  சிறு வயதின் பயம் அது.

           முக்கால்வாசி குளிரும் குளிரும் மட்டுமே. உடலைக் குளுகுளுப்பாகவே வைத்திருக்கும் குளிர்தான்  climate. ஆனால் பனிக்காலங்களில்  பகலில் பனி வெய்யில் நன்றாக அடிக்கும். மேனியைச் சுடும்.  வெய்யில் காய்வது சுகமாக இருக்கும். அப்படிக் காய்ந்து விட்டு, நிழலுக்கோ , வீட்டினுள்ளோ சென்றால் குளிரும். 

          பனி நிறைந்த மேகங்கள் தவழ்ந்து முகடுகளை மட்டுமின்றி முகங்களையும் மூடும்.  பனி மூட்டத்தினூடே முன்னால் இருப்பது தெரியாமல் எட்டு எடுத்து வைப்பது , சினிமாவின் கனவுக் காட்சியைப் போல் த்ரில்லிங் ஆக இருக்கும். ஆனால் ரோட்டில் அப்படி எட்டெடுத்து வைத்ததில்லை . ( Accident  ஆகி விடும். )




       மாலை டைப் ரைட்டிங் க்ளாஸ் சென்று விட்டு, குளிரில்  நடந்து வரும்போது , ஸ்வெட்டரை இறுக்கிக் கொண்டு  தோழிகளுடன் வருவாள் என் தங்கை.  குன்னூர் library எனக்கு ஒரு  lovable place.   எங்கள் மேல் லைன் மற்றும் கீழ் லைன் தோழர்கள் அழைத்துச் செல்ல ,  கதைப் புத்தகங்கள்  எடுத்துக் கொண்டு வந்து படித்தேன். அதில் முத்து comics - ம் உண்டு. ஒரு புத்தகம் ,  Denmark  நாட்டு எழுத்தாளர் ஆன Hans Christian Andersen , danish  மொழியில் எழுதிய The Little Mermaid என்ற கதையின் தமிழாக்கம் - படித்தேன்.  அதை குன்னூரில் எங்கள் வீட்டு வராண்டாவில் அமர்ந்து படித்தேன். அந்தக் கதை என் மனதில் deep  ஆக பதிந்து விட்டது.   கடற்கன்னி  , நாக கன்னி இது போன்ற கதைகள் fascination  தானே !  [ கிளைக் கதை -  இதை எழுதும் போது நாக கன்னி  என்ற வார்த்தையை மறந்துபோய், என் husband -இடம் , ' அது என்னங்க, பாம்புக் கன்னியோ, என்னமோ ஒண்ணு ? '  என்று கேட்டேன்.   அதற்கு ,  ' பாம்புக் கன்னியாமாம் , பாம்புக் கன்னி ! அது நாக கன்னி. நாகப் பாம்பு மட்டும்தான்  கதைகளில் மனுஷனாக ( ! ) மாறும் '  என்று சொன்னார். ]  After many years I told this story to a friend. பின்னர்  வெகு காலம் கடந்து, அதே  library - யில்,  member ஆகி  Five Winds போன்ற கதைகளைப் படித்தேன். 

       இப்போது நினைக்கையிலும் அந்தப் பொழுதுகள்  உஷ்ணமில்லாமல் gloomy யாகத்தான் தோன்றுகின்றன.  பகலோ, இரவோ - இரண்டு பொழுதுகளுமே , பனியாகிய  moisture - சுமந்து கனத்திருக்கும் காற்றைப் போல,  மனதிலும் ,  virtual ஆக உடலிலும், பனிக் குளிரில் கனத்து நிறைந்திருக்கின்றன.

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]